சட்டமா அதிபர் திணைக்களத்தின்
வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனத்தை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட திணைக்களத்தின் தனியார் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளர் மற்றும் பாதுகாப்பு முகாமையாளர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வாகனம் கடத்தப்பட்டதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல உத்தரவிட்டுள்ளார்.
வாழைத்தோட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாகன தரிப்பிடத்தில் இருந்து உத்தியோகபூர்வ வாகனத்தை இரகசியமாக அவர்களது ஊர்களுக்கு எடுத்துச் சென்று 3 நாட்களின் பின்னர் மீண்டும் கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான கேகாலையைச் சேர்ந்த அமில நுவன் ஜயதிஸ்ஸ மற்றும் கடுகண்ணாவையைச் சேர்ந்த சுனில் ரத்நாயக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.