கொரோனா தொற்று காரணமாக தேயிலைத் தோட்ட கம்பனிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கவனித்து அரசாங்கம் வரிச் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி, தேயிலை ஏற்றுமதியின் போது தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி அறவிடுவதை 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோ தேயிலைக்கு அறவிடும் ரூ.3.50 ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரி அறவிடுவதை 6 மாதத்திற்கு நிறுத்துவதாக பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பதிரன கூறுகிறார்.
தொற்று நோய் நிலைமை காரணமாக தேயிலை தொழிற் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கவனத்திலெடுத்து இப்படியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதுடன், தேயிலை உற்பத்தியின் மூலம் பெருமளவு இலாபம் பெற்றுத்தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க தோட்டக் கம்பனிகள் முன்வராமை கவனிக்கத்தக்க விடயமாகும்.
மேற்படி நிவாரணத்தினால் ஒவ்வொரு கிலோ தேயிலையிலிருந்தும் தோட்ட முதலாளிக்கு அல்லது கம்பனிக்கு ரூ.3.50 மீதமாகிறது. என்றாலும் இந்நாட்டு தேயிலை பில்லியன் கணக்கான தொன் ஏற்றுமதி செய்யப்படுவதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். ஆகவே, தோட்டக் கம்பனி உரிமையாளர்கள் இந்த வரிச் சலுகையால் தமது இலாபத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கம்பனிகள் பெருமளவு இலாபம் பெறுவதற்காக வழிசமைத்துக் கொடுக்கும் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்குவதாக வாக்குறுதியளித்து, அதன் பின்னர் அதை கவனியாது விட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் மோசடியாகும். மாத்திரமல்ல, 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது மேற்படி வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறிய ஜனாதிபதி கோட்டாபய உட்பட பொதுஜன முன்னணி அரசியலும் மோசடியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறாக ஆளும் குழுக்கள் பொய் வாக்குறுதிகள் வழங்கும் போது, தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு அந்த மோசடிக்காரர்களுக்கு உதவும் போலி தேர்தல் கோசங்களை பிடித்துச் செல்லும் தோட்டத் தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளன.