வௌிநாடுகளில் பணியாற்றிய 23 இலங்கை உழைப்பாளிகள் கொரோனா தொற்றின் காரணமாக இறந்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறுகிறது.
இவர்கள் குவைத், துபாய். அபுதாபி. சவூதி அரேபியா,ஓமான் ஆகிய நாடுகளில் பணியாற்றியவர்களென பணியகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் மார்ச் மாதம் தொடக்கம் மரணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வௌிநாட்டு வேலைக்குச் சென்ற உழைப்பாளிகள் இலங்கைக்குத் திரும்பும் நோக்கில் கடந்த 3 மாதங்களாக அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும், தூதுவராலயங்களுக்கும் வேண்டுகோள் விடுத்த போதிலும்,அவர்களை வரவழைப்பதில் அரசாங்கம் பொடுபோக்காகவே செயற்படுவது தெரிகிறது.
இவர்களை இலங்கைக்கு திருப்பி அழைக்குமாறும், இவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்குமாறும் பல்வேறு அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. விசேடமாக சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமானது அமைதிப் போராட்டம் நடத்தியும், ஊடக சந்திப்புகளை நடாத்தியும் இவர்கள் விடயத்தில் உடனடி கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தியது.
பில்லியன் கணக்கான டொலர் வௌிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தரும் மத்தியக்கிழக்கில் பணியாற்றும் இலங்கை உழைப்பாளிகள் விடயத்தில் அரசாங்கம் உதாசீனமாக செயற்படுவதாகவும், உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கைப்பணியாளர்களை இங்கு வரவழைக்கவோ, சுகாதார பாதுகாப்பு வழங்கவோ நடவடிக்கை எடுக்குமாறும் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் அரசாங்கத்தை கோரியிருந்தது.