கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (25) அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடுவளை நகரசபையின் உறுப்பினரான போசெத் கலஹேபத்திரனவால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஆயுதப்படை தளபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் ஆனையிறவு பகுதியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொலை செய்த தான், கொரோனா வைரஸைவிட கொடூரமானவன் என கருணா அம்மான் கடந்த 19 ஆம் திகதி திகாமடுல்ல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்த கருத்திற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூற்று சுயமாக தெரிவிக்கப்பட்ட ஒன்று எனவும் அதில் கொலை செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ளமையினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், கருணா அம்மான் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.