கொரோனா ஒழிப்பிற்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி அரசாங்கம் பல்வேறு தனவந்தர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் சேகரித்த கொவிட் அனர்த்த நிதியத்தில் பணம் செலவீடு செய்த முறை மற்றும் எஞ்சியுள்ள பணம் சம்பந்தமாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்கனவே பெருமளவில் பரம்பலாகி வருவதோடு, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கொரோனா நிதியத்திலிருந்து செலவிட வேண்டுமென சமீபத்தில் குரலெழுப்பப்பட்டது. அதேபோன்று, நிதியம் சம்பந்தமாக எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில், ‘படைவீரர்’ மற்றும் ‘ஹெல்பிங் ஹம்பாந்தொட்ட’ என்ற பெயரில் நடாத்திச் செல்லப்பட்ட சுனாமி நிதியத்திற்கு ஏற்பட்ட நிலை ஏற்படக் கூடுமென பலர் கருதுகின்றனர். அந்த நிதியத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதுடன், ராஜபக்ஷ குடும்பம் அவற்றை முறைகேடாக பயன்படுத்தியதாக பொதுக்கருத்தொன்றும் இருந்தது.
எவ்வாறாயினும், மக்களிடமிருந்தும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியம் பின்பு ‘செய்கடமை’ -‘இட்டுகம’ – நிதியமென அழைக்கப்பட்டு பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ‘செய்கடமை கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்’ சம்பந்தப்பட்ட செலவீனங்கள் குறித்து ஜனாதிபதி செயலகம் வெளிப்படுத்தியுள்ளது
அதன்படி, 2020 மார்ச் மாதத்திலிருந்து ஒக்டோபர் 31ம் திகதி வரை செய்கடமை நிதியத்தில் ரூ.1,668,379,121.74 பணம் இருந்துள்ளது. அதேபோன்று இந்த நிதியம் நவம்பர் 10ம் திகதி வரை ரூ.402,190,701 பணம் செலவீடு செய்துள்ளது அல்லது செலவீடுகளுக்காக ஒதுக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அந்த செலவீனம் கணக்காய்விற்கு உட்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.