மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் ஒரு சில கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை காரணம் தெரிவித்து, கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும், இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலையிலிருந்து தப்ப முயன்ற 5 கைதிகளில் ஒருவர் மரணமடைந்திருந்தார் என்பதோடு, தப்பித்து வெளியில் சென்ற 4 பேரில் 3 பேர் உடனே கைது செய்யப்பட்டதோடு, மற்றைய நபர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.