வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இன்று பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் ” புரவி புயல்” நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்காக நகர்ந்து மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் 100 கிமீ வேகம் வரை புயல் காற்று வீசக் கூடும். இன்று மாலை அல்லது இரவில் மேற்கு நோக்கி நகர்ந்து,டிசம்பர் 3-ஆம் திகதி காலை மன்னார் வளைகுடா பகுதியை அடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ஆம் திகதி இரவு அல்லது டிசம்பர் 4-ஆம் திகதி அன்று அதிகாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையில் கரையை கடக்கும் என தெரிய வருகிறது.
புரவி புயலின் பெயர்க்காரணம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புரவி என்றால் குதிரை என்பதாக அந்த தகவல் பரவி வருகின்றது.இந்தபெயரை மாலைதீவுகள் சூட்டியுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த மாதம் வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வேளாண் நிலங்கள், பயிர்கள் வீணாகின.