ரஜினிகாந்தின் உடல்நிலையில் அக்கறை இருப்பதால், அதற்கு ஊறுவிளைவிக்காதபடி அரசியல் முடிவு குறித்து சிந்தியுங்கள் என கூறியிருப்பதாக அவரை சந்தித்து விட்டு வந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்.
தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை திங்கட்கிழமை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து தகுந்த நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்பேன் எனக் கூறினார். விரைவில் இது தொடர்பாக ரஜினிகாந்திடமிருந்து அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் நண்பரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் புதன்கிழமை (டிசம்பர் 2 ) போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்திடம் அரசியல் தொடர்பாக பேசியவற்றை வெளியிட மறுத்தார்.
மேலும், "தமிழக மக்களிடம் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் ரஜினிகாந்திற்கு கிடையாது. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ, அதை அவ்வப்போது சொல்லியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாது" என்று தமிழருவி மணியன் கூறினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதை அவர் சொன்னால்தான் தானும் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறிய தமிழருவி மணியனிடம், அவரது உடல்நலத்தில் அக்கறை உள்ள மனிதராக என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டபோது, "அவரது உடல்நலனில் அக்கறை இருப்பதால், அதற்கு ஊறுவிளைவிக்காதபடி அரசியலுக்கு வருவது பற்றி சிந்தியுங்கள் என சொல்லிவிட்டு வந்தேன்" என்று தெரிவித்தார்.