சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரிதகதியில் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களை தடுத்து நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார துறையின் பணி தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
சுகாதார துறையினரும், முப்படையினரும் மற்றும் பொலிஸாரும் கொவிட்19 தடுப்பு நடவடிக்கையில் பெருமளவு பங்களிப்பு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொவிட் பரவலுக்கான குற்றச்சாட்டை சுகாதார ஊழியர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைகளில் தங்களின் சுகாதார பாதுகாப்புக்காக போதுமான வசதிகள் இல்லையென்றும், தமக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். மாத்தளையில் ஆரம்பித்துள்ள இந்த போராட்டம் மற்றைய இடங்களுக்கும் வராமல் தடுத்து அரசாங்கம் சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கேட்கின்றோம்.
இந்த நேரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாமென அந்த ஊழியர்களை கேட்பதுடன் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கான நடவடிக்கையெடுக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த விடயத்தில் சுகாதார அமைச்சருக்கென்று பொறுப்புள்ளது. அதன்படி அவர் ஒளிந்திருக்காது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றார்.