கொரோனா தொற்று காரணமாக இறந்த நிலையில், உறவினர்களால் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாத உடல்களை தகனம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிற்கு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில், கொரோனா தொற்று காரணமாக மரணித்த சுமார் 19 உடல்கள் உறவினர்களால் ஏற்கப்படாத நிலையில், தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சட்டமா அதிபர் மேற்படி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
குறித்த விடயம் சுகாதாரப் பாதுகாப்புக்கு கடுமையான பாதிப்பு என்பதை சுட்டிக்காட்டி, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக, சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி, நிஷாரா ஜயரத்ன, தெரிவித்தார்.
கொரோனா காரணமாக மரணித்த நிலையில், அவர்களது உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காததன் காரணமாக, உடல் தகனத்தை பகிஷ்கரித்து முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்களது உறவினர்களின் சடலங்களை ஏற்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.