உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து கலந்தாலோசிக்க அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நாளையதினம் (16) பிற்பகல் 2.30 மணிக்கு, அவரது நீதிபதிகள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்குமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, கடந்த 8 மாதங்களாக தொடர்ந்தும் CIDயினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் அவரை சந்திக்க அனுமதியும் மறுக்கப்பட்டு வந்தது.
அதற்கமைய, தங்களது கட்சிக்காரரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்தாலோசனை செய்யும் உத்தரவை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) அதன் முடிவை அறிவித்தது.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த பெனாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதிகள் குழாம் இவ்வுத்தரவை வழங்கினர்.