முஸ்லீம் மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.
கொவிட் 19 காரணமாக உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பில் தாமதமின்றி இறுதி முடிவை எடுப்பது அவசியமானதாகும்.
மருத்துவநிபுணர்களின் கருத்துப்படி உடல்களை புதைப்பது ஏனையவர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது போல தோன்றுகின்றது.
உலகின் பல நாடுகளில் ஏனையவர்களிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுகின்றன என தோன்றுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த விடயம் குறித்து முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நியாயமான நேரிய முடிவொன்றிற்கு வரவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது என நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முஸ்லீம் மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு அவர்களிற்குள்ள உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்,இது தொடரக்கூடாது என தெரிவித்துள்ளார்.