கொரோனா தொற்றுநோயைப் பற்றி சில ஊடகங்கள் வெளியிடும் செய்திகளால் மக்கள் பாதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுகிறார். இதனால் சிலர் கொரோனா அறிகுறிகள் தோன்றினாலும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு வருவதில்லை என்று டாக்டர் அசெல குணவர்தன கூறுகிறார்.
இந்த சூழ்நிலையை கருத்திற் கொண்டு, செய்திகளை வௌியிடும்போது பின்வரும் மூன்று விடயங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
01.கொவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தனிப்பட்ட விடயங்கள் பாதிக்கும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.
02.கொவிட் -19 நோயாளிகள் குறித்து தகவல்களை வெளியிடும் போது இனம் ,மதம், அல்லது வேறு ஏதேனும் காரணிகளை முன்னிலைப்படுத்தி சமூகத்திலிருந்து அவர்களை விலக்கும் செய்திகளை வெளியிடக்கூடாது.
03.கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்புகள் குறித்து செய்தி வெளியிடும் போது, சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மட்டுமே ஊடகங்கள் மூலம் பரப்பப்பட வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் கொவிட் -19 நோய் நாடு முழுவதும் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.