வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு 1414 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் இவ் ஆண்டு ஜெனிவா மனிதவுரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முக்கிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களால், மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்தி வாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஒரு முக்கியமான முடிவை எடுக்க உள்ளது. அவர்களின் புதிய தீர்மானத்தில் சேர்ப்பதற்காக நாம் முன்வைத்துள்ள யோசனையை அனைத்து நாடுகளும் கவனத்தில் எடுக்கவேண்டும் என்றனர்.