பாடசாலைகளில்ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில், புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்காமல் , ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக இராணுவத்தினரை ஈடுபடுத்தும் ஆலோசனைக்கு கல்வி அமைச்சு இணங்கியுள்ளது.
கல்வித் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை உக்கிரமடைந்துள்ளமையால், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விசேடமாக கிராமப்புற பாடசாலைகளிலும், நகர்புற பாடசாலைகளிலும் மாணவர்களின் கல்விக்குத் தேவையான ஆசிரியர்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளது.
பொதுவாக பாடசாலைகளில் சில பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமையால், வேறு பாடங்களுக்காக நியமனம் பெற்ற ஆசிரியர்களிடம் அந்தப் பாடங்களை ஒப்படைத்துவிட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண அதிபர்கள் முயன்று வருகின்றனர். ஆனால், பல வருடங்களாக நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்ப அரசாங்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி வருடந்தோறும் வெட்டப்படும் நிலையில் புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தவறியுள்ளது.
ஏற்கனவே கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற சுமார் 3000 ஆசிரியர்கள் நியமனம் கிடைக்காமல் ஒருவருடமாக காத்திருக்கின்றனர். இவர்களை புறந்தள்ளிவிட்டு ஆயுதப் படையினருக்கு புதிய நியமனங்களை வழங்கி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது தெரிகிறது.
ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காக விமானப் படை உறுப்பினர்களை ஈடுபடுத்த விமானப்படைத் தளவி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன முன்வைத்த ஆலோசனைக்கு கல்வி அமைச்சு இணங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் முதலாவதாக வவுனியாவை அன்மித்த கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேற்படி பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படை ஈடுபடுத்தப்படவுள்ளது. ஏனைய பிரதேசங்களிலுள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் விமானப் படையினரை ஈடுபடுத்தி மாணவர்களுக்கு கற்பிப்பது சம்பந்தமாக அரசாங்கம் அவதானித்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.