ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள போதிலும் அக்கட்சியின் பிரசாரக்
கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான ஆயத்தங்கள் இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது ஸ்ரீ.ல.சு.கட்சியினர் முகங்கொடுக்க நேர்ந்துள்ள நிலையே இதற்கு காரணம் என தெரிய வருகின்றது.
ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடியதுடன், அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தயாசிரி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“ஸ்ரீ.ல.சு.கட்சி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து 5000க்கும் அதிக கூட்டங்களை நாடு முழுவதிலும் நடாத்துவதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மேலாக வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தெளிவு படுத்துவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சி இன்று தீர்மானித்தது. எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுஜன பெரமுன வின் தோ்தல் பிரசார கூட்ட மேடைகளில் ஏறி அவர்களோடு இணைந்திருப்பதற்கு நாம் தயாரில்லை. அது பயனளிக்கும் என நாம் நினைக்கவில்லை. எனவே கிராம மட்டங்களில் பிரசாரக் கூட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.