ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் ஓய்வு பெற்ற இராணுவ பிரதானிகளிடம் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் வாயை மூடிக் கொண்டிருக்குமாறு
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான இராணுவ பிரதானிகளால் கடந்த காலத்தில் செய்த, கூறிய விடயங்களினால் சிவில் சமூகம் மற்றும் மத்திய தர வர்க்கத்தினரும் அச்சமடைந்து போயுள்ளதாக பெசில் ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவு படுத்தியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ராவய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இது தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்நாட்களில் தீவிரவாதிகளிடத்தில் வாயை மூடிக் கொண்டிருக்குமாறு கோரப்பட்டிருக்கின்றது. மெதகொட அபயதிஸ்ஸ தேரர், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சரத் வீரசேகர போன்றோர் அந்நாட்களைப் போன்று தற்போது தீவிரவாதக் கருத்துக்களைத் தெரிவிப்பதில்லை. அது நன்றாகவே தெரிகின்றது. இது ஒரு தேர்தல் தந்திரம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
எனினும் மாற்றம் ஒன்று ஏற்பட்டால் அவர்களேதான் முன்னணியில் இருப்பார்கள். தற்போது மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு பாதுகாப்பு அமைச்சில் உயர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்தான் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவை வழங்குவர்களைக் கொல்ல வேண்டும் எனக் கூறியவர். அவா் இதனை பகிரங்கமாகவே மாநாடு ஒன்றில் வைத்து கோட்டாபய ராஜபக்ஷவை முன்னால் வைத்துக் கொண்டே கூறினார்.
அந்நேரம், இல்லை...அவ்வாறு செய்ய விட முடியாது என கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்து கூறியிருக்க வேண்டும். அதே போன்று அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்து தூக்கிலிட வேண்டும் என்றும், அவர்கள் தேசத் துரோகிகள் என்றும் கூறினார். இவ்வாறானவர்களின் மனோநிலை எவ்வாறானது என்பதை இவ்வாறான கருத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.