ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள
அரசியல் செயற்பாட்டில் இணைந்து கொள்வதற்கு முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் உப தலைவருமான குமார வெல்கம மற்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவரும் இது தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அறிவித்துள்ளதாகவும், சந்திரிக்கா நாடு திரும்பியதும் இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது வெளிநாடு சென்றுள்ள சந்திரிக்கா கடந்த சனிக்கிழமை நாடு திருப்ப இருந்த போதிலும் அவரது பயணம் சில தினங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
இதேநேரம், தான் ஒரு போதும் மொட்டு அல்லது அன்னத்தின் கீழ் அரசியல் செய்யப்போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீ.ல.சு.கட்சியை மீளக் கட்டியெழுப்பும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் உப தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். குமார வெல்கமவை மொட்டுவுடன் இணைந்து கொள்ளுமாறு மத்துகம நகரில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “எனது ஊரின் எனது ஆதரவாளர்கள் மொட்டு கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு என்னைப் பலவந்தப்படுத்துகின்றனர். எனினும் நான் எடுத்த தீர்மானத்தை மாற்றப் போவதில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.