ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அதிகார பேராசை பிடித்தவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கான நேரம் வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம், கட்சியை சரியான திசையில் கொண்டு வருவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தின் ஊடாக நேற்று (21) இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் அடுத்து வாரங்களில் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை வழங்க உள்ளனர்.
இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடு திரும்பிய உடன் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் கட்டம் கட்டமாக ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய வகையில் தினந்தோறும் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், இதுவரையில் சுமார் 300 பிரதேச அரசியல்வாதிகள் அவ்வப்போது ஊடக சந்திப்புக்களில் கலந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரையில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்காத போதிலும் அடுத்த வாரங்களில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் சிலரை இணைத்துக் கொள்வதற்கு முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.