தற்போது அவசர மற்றும் திடீர் பயங்கரவாத அச்சுறுத்தில் காணப்படுவதாகத் தெரிவித்தும், தவறாக வழிநடாத்தியும் சில அரச நிறுவனங்களும், ஆட்களும்
மக்களை தேவையற்ற வகையில் அச்சத்திற்கு உள்ளாக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளதாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (22) மாலை அவர் விடுத்த விஷேட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டினுள் எவ்வகையிலான அவசர மற்றும் திடீர் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தோன்றியிருக்கவில்லை என பாதுகாப்பு தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தரை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பிரசாரம் தொடர்பில் தெளிவு படுத்தி ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவினால் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அரச நிறுவனங்கள் மற்றும் தேசிய முக்கியத்துமுள்ள இடங்களில் தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்துவது தொடர்பில் என்னால் 2019.04.23ம் திகதி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதோடு, அதன் பின்னர் அவ்வப்போது அந்த அரச நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சாதாரண நினைவூட்டல் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய கடிதங்கள் மற்றும் சுற்றுநிருபங்களைத் தற்போது அவசர மற்றும் திடீர் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக விளக்கப்படுத்தியும், முறையற்ற வகையில் பயன்படுத்தியும் சில அரச நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் மக்களை தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக்கும் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
தற்போது நாட்டினுள் எந்த வகையிலுமான அவசர மற்றும் திடீர் பயங்கரவாத அச்சுறுத்தலும் காணப்படவில்லை என பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.