ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா நடுநிலை அரசியிலிருந்து விடுபட்டு ஜனாதிபதி தேர்தல் மேடையில் ஏறுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு
நெருக்கமான ஒருவர் theleader.lk இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு இம்மாதம் 28ம் திகதி நாடு திரும்ப உள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை வழங்கி அரசியல் பிரசார மேடையில் ஏறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கைகள் சில ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும், அவைகளையும் கவனத்திற் கொண்டு தான் ஆதரவளிக்கப் போகும் வேட்பாளர் யார் என்பதையும் தீர்மானித்து விட்டதாகவும் அவர் தொடர்ந்து கூறும் போது கூறினார்.
இதனடிப்படையில் அடுத்த வாரத்தில் ஜனாதிபதி தோ்தல் பிரசார மேடைகளில் ஏறுவது உறுதியானது என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான அந்த பிரமுகர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் ஜனாதிபதி சுயாதீனமாக இருக்கப் போவதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரதானிகள் கூறியிருந்த போதிலும் ஜனாதிபதி அந்த தீர்மானத்தை தற்போது மாற்றிக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.