போலியான அடிப்படைவாத கருத்துக்களை பரப்பி, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட அவரது அணியினர்
கத்தோலிக்க மற்றும் பௌத்த மக்கள் இடையில் பீதியான மனநிலையை உருவாக்கி, அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
கம்பஹாவில் நேற்று நடைபெற்ற பௌத்த மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர், அக்டோபர் 5ஆம் திகதி மற்றும் அக்டோபர் 25ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்க போகிறது. மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிச் சந்தேகநபர்களிடம் இருந்து சினைப்பர் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ள போன்ற செய்திகள் பரவின. சில ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்களுக்குள் பீதியான மனநிலைமை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இளம் தலைமுறையினர் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதும் அவர்களின் நோக்கம். புதிய வாக்காளர்களான இளைஞர்கள் போரை பார்தத்தில்லை. அவர்கள் சஹ்ரானின் தாக்குதலையே பார்த்தனர்.
இதனால், அவர்களுக்குள் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தை தம்மால் மாத்திரமே போக்க முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த கோத்தபாய உட்பட அவரது அணியினர் இவ்வாறான பீதியை பரப்பி வருகின்றனர்.சஹ்ரானின் தாக்குதல் சம்பந்தமான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சஹ்ரான் என்ற நபர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உருவான நபர் கிடையாது.
10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அடிப்படைவாதி, காத்தான்குடிப் பகுதியில் மக்களை அச்சுறுத்தி, ஏனைய முஸ்லிம் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து, சமய நிலையங்களுக்கு தீ மூட்டி, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.பல முறை இந்த நபரை பொலிஸார் கைது செய்ய முயற்சித்த போது, அவரை பாதுகாக்கும் கொள்கை கையாளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட போது தெற்கில் பெரும் பீதியை ஏற்படுத்தினர். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைகளை செய்தது சஹ்ரான், அவரது சகோதரர் ரில்வான், மில்ஹான், ஆமி மொய்தீன் என்ற பெயரில் அழைக்கப்படும் நபர்களின் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இதனை செய்ய பலர் அவர்களுக்கு உதவியுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா உட்பட மூன்று வேட்பாளர்கள் இந்த அடிப்படைவாதிகளின் வாக்குகளை பெற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இப்படி இவர்களே அடிப்படைவாதிகளை வளர்த்துள்ளனர். 2012, 2013ஆம் ஆண்டுகளில் புலனாய்வு பிரிவு, தௌஹித் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்புக்கு சம்பளம் கொடுத்துள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் நாட்டின் புலனாய்வு பிரிவினரை அரசியல் கைப்பாவைகளாக பயன்படுத்த மாட்டோம். மத மற்றும் இன ரீதியான மக்கள் பிரித்து, குழுக்களுக்கு அணிகளுக்கும் இரகசியமாக துப்பாக்கிகளை வழங்கும் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பு அல்ல எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.