ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சி வேட்பாளரைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியினர் கண்டிப்பாக
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீ.ல.சு.கட்சி உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாறு குமார வெல்கம வலியுறத்தியுள்ளார்.
நேற்று (25) கொழும்பு கிரேண்ட ஒரியன்டல் ஹோட்டலில் இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குமார வெல்கமவின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் முழு நாட்டையும் பிரதிநித்துவப் படுத்தி ஸ்ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஒன்று கூடலில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பின்னர் அதுவும் ஏற்பாட்டாளர்களால் இரத்துச் செய்யப்பட்டது.
இங்கு கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய குமார வெல்கம மேலும் கூறுகையில்,
“இந்த கூட்டம் மிகவும் வெற்றிகரமான ஒரு கூட்டமாகும். இந்த வெற்றிகரமான கூட்டத்தை முன்னே கொண்டு செல்ல வேண்டும். அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் இதற்கு குமார வெல்கம தலைமைத்துவத்தை வழங்குவேன். இனி நான் பின்வாங்க மாட்டேன்.
அத்தாவுட செனவிரத்ன கூறியதைப் போன்று நாம் முன்னேறி செல்ல வேண்டுமாயின் இந்த தேர்தலில் மொட்டு கட்சியைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமக்கு வேறு மாற்று வழிகள் இல்லை. மாற்று வழிகள் இருக்கின்றது என நினைக்க வேண்டாம். நான் ஒரு போதும் மொட்டுவுக்கு வாக்களிக்க மாட்டேன். ஆனால் எனது வாக்கை நான் ஒருவருக்கு அளிப்பேன். அது யாருக்கு என யாரும் என்னிடம் கேட்க வேண்டாம்” என்றார்.