கோட்டாப ராஜபக்ஷ ஜனாதிபதியானால் அவர் விடுதலை செய்யப் போவது, 2009ம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் அதாவது 2010 முதல் 2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்நாட்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட, மாணவர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை போன்ற
குற்றச்சாட்டுக்களில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் சிலரேயாகும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களை வழிநடாத்தியிருப்பது ஒரு தனி நபரும், குழுவுமாகும் என்றும் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
UTV தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போதே “தேசிய மக்கள் இயக்கத்தின்” ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா இதனைத் தெரிவித்தார்.
யுத்தத்தில் ஈடுபட்டதற்காக படைவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்களா? என UTVயின் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் மகேஸ், நான் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த போது,
“யுத்தத்தில் கலந்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட படையினர் எவரும் இல்லை. தெளிவாகவே யாராவது சிறையில் இருப்பார்களாயின் அவர்கள் யுத்தத்தின் போது இராணுவ சீருடையின் போா்வையில் ஏதேனும் ஒன்றைச் செய்தவராகத்தான் இருக்க முடியும்.
அவர்கள் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2010 முதல் 2015ம் ஆண்டு காலப்பகுதியில் இந்நாட்டின் ஊடகவியலாளர்களைத் தாக்கி, ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கச் செய்து, மாணவர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கச் செய்தது போன்ற விடயங்களைச் செய்ததால்தான் அவர்கள் இன்று சிறையில் இருக்கின்றார்கள். அல்லது பிணையில் வெளியில் வந்திருக்கின்றார்கள்.
அந்த விசாரணைகள் வேறாக இடம்பெறும் விசாரணைகளாகும். அவை இராணுவத்திற்குத் தொடர்பில்லாதது. இராணுவத்தில் சொற்பமானவர்களை குற்றச் செயல்களில் ஈபடுவதற்கு ஒருவரும், குழு ஒன்றும் வழிநடாத்தியிருக்கின்றார்கள் என்பதை கவலையோடு தெரிவிக்க வேண்டியிருக்கின்றது” என்றார்.