பாறுக் ஷிஹான்
திருட்டுச் சம்பங்களில் நீண்ட
காலமாக ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை 5 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை புற நகர் பகுதிகளில் உள்ள 4 வீடுகள் ஒரே நாளில் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை(20) பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.
குறித்த முறைப்பாட்டுக்கமைய பெரிய நீலாவணை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து திருட்டு இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிரீவி கமெராக்களையும் கண்காணித்தனர்.
இதற்கமைய குறித்த திருடப்பட்ட வீடுகளில் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை திருடர்கள் தமது கைவரிசையை காட்டியமையை அவதானித்தனர்.
மேலும் தொடர் விசாரணைகளை துரிதப்படுத்திய நீலாவணை பொலிஸாருக்கு போதைப்பொருள் பாவனை தொடர்பாக பொலிஸாரின் ஒற்றர் மூலம் தொலைபேசி வாயிலான தகவல் கிடைக்கப் பெற்றது.
இதனையடுத்து பொலிஸ் குழு யதிருடர்கள் பதுங்கி இருந்த வீட்டை முற்றுகையிட்டு அங்கிருந்த 2 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
இதன் போது கடந்த காலங்களில் வீடுகள் உடைத்து திருடப்பட்ட பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம், போதைப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
அத்துடன் கைதான மருதமுனை நூராணியா வீதியை சேர்ந்த அப்துல் காதர் முகைதீன் முஹமட் ரொகான (30) மற்றும் மருதமுனை சம் சம் வீதியை சேர்ந்த முகமட் மஜினூன் முகமட் கிகான் (32) ஆகிய இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டதுடன் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (21) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது இரு சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புகாலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் குறித்த இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி உருக்கிய கல்முனை நகைக்கடை உரிமையாளர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன்
அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.