துபாய் அரசால் கைது செய்யப்பட்டு
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒன்று நுகேகொடை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு துபாய் சென்று சந்தேக நபரை கடந்த 12ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
நுகேகெட, ஜம்புகஸ்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே துபாயில் இருந்து இந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் 90 நாட்கள் தடுப்பில் வைக்க உத்தரவு பெற்றுள்ளனர்.
இதன்படி, விசாரணைகளின் போது சந்தேக நபர் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு துபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பிரவுனிங் ரக துப்பாக்கியை நுகேகொட பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் சந்தேக நபர் புதைத்து வைத்திருந்தமை தெரியவந்ததையடுத்து, குறித்த துப்பாக்கி பொலிஸ் அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் லக்கி ரந்தெனியவின் பணிப்புரைக்கமைய, கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.