தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு
செய்த சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மருந்து வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டாக்டர் கபில விக்கிரமநாயக்கவை தகுந்த நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
இதன்படி மனுதாரரை தகுந்த நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும், இந்த உத்தரவு மனுதாரருக்கு எதிரான மேலும் சாட்சியங்களைத் தடுக்காது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.