கொழும்பு தேசிய பல் வைத்தியசாலைக்கு
முன்பாக முச்சக்கர வண்டியில் வைத்து ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி மற்றும் 30 கிராம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 23ஆம் திகதி நள்ளிரவில் மூவர் கொண்ட குழுவினர் இந்தக் கொலையை செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ஸ்மார்ட்போன் திருடுவதற்காக இந்த குற்றம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கொடகவெல பலவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்களால் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியையும், தப்பிச் சென்ற மற்றைய சந்தேக நபரையும் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.