ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையிட்டு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் விடுத்துள்ள செய்தி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயக நடைமுறையின் உச்சகட்டமும்,
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
தேர்தலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட நிலைப்பாட்டை ஆதரித்து, ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பாரபட்சமின்றி ஒத்துழைத்த தேசிய தேர்தல் ஆணைக் குழு பொலிஸ் திணைக்களம் மற்றும் இதர நிறுவனங்களுக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தல், நாட்டின் பிரஜைகளின் மறுமலர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், புதியதொரு அரசியல் கலாசாரம் மற்றும் அணுகுமுறைக்கான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. அதுவே இலங்கையர்களாகிய நம் அனைவருக்கும் ஒருமித்த செய்தியாக உள்ளது.
இது எந்த ஒரு தீவிரவாத உணர்வுகளோ அல்லது வேறெந்த குறுகிய உணர்வுகளோ தலைதூக்காமல் கிடைத்த வெற்றியாகும்.
மேலாதிக்க சிந்தனைப் போக்குக்கு மாற்றமான
கொள்கை தளத்தில் நாங்கள் நம்பிக்கை
வைத்திருப்தோடு அதுவே புதிய அரசியல் கலாசாரத்தின் அடித்தளமுமாகும்
இது இலங்கை மக்களின் நீண்டகால ஏக்கத்தின் வெளிப்பாடாகும்.
ஊழலற்ற ஆட்சி மற்றும் இன, மத,மொழி பேதங்களுக்கு அப்பால் ஒருங்கிணைந்த தேசமாக சகல சமூகங்களும் முன்னேற வேண்டும்.
இந்தத் தேர்தல் சந்தேகத்திற்கிடமின்றி மக்களின் ஜனநாயகக் குரலுக்குச் சான்று பகரும் அதே வேளையில், புதிய ஜனாதிபதியின் வெற்றிகரமான பயணத்தை நாங்கள் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
எம்.நிசாம் காரியப்பர்,
ஜனாதிபதி சட்டத்தரணி,
செயலாளர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்