மாத்தறை மாவட்டத்தின்
கந்தர மீன்பிடித் துறைமுகம் மற்றும் மாத்தறையை அண்மித்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட குடாவெல்ல மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு மீன்பிடி படகுகள் இன்று (21) அதிகாலை தீக்கிரையாகியுள்ளன.
இன்று (21) காலை 7:00 மணியளவில் கந்தர மீன்பிடி துறைமுகத்தில் பல நாள் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்ததையடுத்து மீனவர்கள் உடனடியாக மற்றைய படகுகளில் இருந்து தீப்பிடித்து எரிந்த படகை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், அந்தப் படகிலிருந்தஅனைத்து மீன்பிடி உபகரணங்கள் ஏற்கனவே தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
மீன்பிடி படகில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மீனவர்கள் கருதுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மீன்பிடி படகின் உரிமையாளர் கந்தர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்துக்குச் சொந்தமான பல நாள் படகு ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவியதால் மேலும் இரண்டு சிறிய படகுகள் சேதமடைந்துள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இந்த படகுகள் தீயினால் ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை மற்றும் கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.