குருந்துவத்தை பொலிஸ்
பிரிவுக்குள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான ஹிருணிகா பிரேமசந்திர உட்பட 14 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
ஆனால் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அத்துல ரணகல, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் சமூகத்துக்கு தெரியப்படுத்துவதற்காகவே சந்தேக நபர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்கத்துக்கு எதிரான சதித்திட்டம் எதுவுமில்லை எனவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.