உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்பில் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் மீது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவும் அல்லது பாராளுமன்ற தெரிவுக்குழுவும் குற்றம் சுமத்தவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனால், பதவிகளில் இருந்து அவர்களை நீக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகிய இரு அதிகாரிகளின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வது சிக்கலாக இருக்குமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அதிகாரிகளும் பக்கச்சார்பற்றவர்கள் என்பதை உயிர்த்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூட நன்கு அறிவார்கள் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளை தற்போதைய பதவிகளில் இருந்து நீக்க வேண்டுமென்பதில் குறிவைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஷானி அபேசேகர கோட்டாபய அரசாங்கத்தின் முதல் வேட்டை என்றும் அது விசாரணைகளுக்கு தடையாக இருந்ததாகவும் விஜித ஹேரத் அங்கு தெரிவித்தார்.
எந்தவொரு விசாரணைக்கும் தமது அரசாங்கம் தடையாக இருக்காது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.