மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலை
அவமதிக்கும் வகையில் கொழும்பு நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவத்தின் மூளையாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளார் என கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (21) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிவித்தது.
பிரதான சந்தேக நபரைக் கைது செய்வதற்காகவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே வினவியபோதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், அவர் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் முன்னாள் எம்பி ஸ்ரீரங்கா வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றியதாக தெரிவித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சம்பவம் தொடர்பில் சாட்சியமளித்தவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வழக்குகளில் சாட்சிகளாக இருக்க வேண்டியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், பொலிஸாரால் வழக்குகளை நிரூபிக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 சந்தேக நபர்களில் 4 பேரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட பிரதம நீதவான், வழக்கை நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்