ஜனாஸா தகனம் செய்யும் விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களின் ஜனாஸா விடயத்தில் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது.
உலக நாடுகளில் எந்த நாடும் இப்படி ஒரு அநியாயத்தை செய்யவில்லை. இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அடிப்படை விடயங்களில் இந்த அரசு கைவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். எனவே முஸ்லிம்களின் உடல்கள் சமய ரீதியாக புதைக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது.
அதேபோல எமது நிலங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பிடத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டை மிக திறமையாக செய்து வருகின்றது.
இந்த விடயத்தில் எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். நாங்கள் சமய வேறுபாடுகள் இன்றி தமிழ் பேசும் மக்களாக ஒற்றுமையாக செயற்படும் போது தான் நாங்கள் இந்த அரசை எதிர்க்க முடியும். அடிபணிய வைக்க முடியும். இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.