ராஜபக்ஷ குடும்பத்தின் மொட்டுக் கட்சியிலிருந்து ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் போராட்டத்தில் முன்னிலை வகிப்பதற்கு தயார் என ஸ்ரீ.ல.சு.கட்சியின்
உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“ஸ்ரீ.ல.சு.கட்சி மீது பற்றுள்ள, ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்க முன்வரும் அனைத்து ஸ்ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்களை நாம் ஓரிடத்திற்கு எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்த பின்னர் எம்மால் கட்சியைப் பாதுகாக்க முடியும்.
அடுத்தது, கட்சியைப் பாதுகாப்பது என்பது இந்நேரத்தில் இலகுவான ஒரு விடயமல்ல. ஆனால் எம்மால் அதனைச் செய்ய முடியும். நான் பழைய ஸ்ரீ.ல.சு.கட்சிக் காரன் என்ற வகையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றவன் என்ற வகையில் இதனைச் செய்ய முடியும் என நினைக்கின்றேன்.
எமது கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க இன்று உயிருடன் இருக்கின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி என்பதோடு முதலாவது பெண் ஜனாதிபதியும் கூட. எனவே அவரது தலைமைத்துவத்தில், அவரது வழிகாட்டலின் கீழ் எமது கட்சியைப் பாதுகாக்க முடியும். இதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதற்கான அடித்தாளம் போடப்பட்டுள்ளது.
நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன். நான் ஒரு போதும் மொட்டுவுக்காக வேலை செய்யப் போவதில்லை. நான் மொட்டுவுக்கு வாக்களிக்கப் போவதுமில்லை. அதே போன்று நான் அன்னத்திற்கு வேலை செய்யப் போவதுமில்லை. இந்த தேர்தலில் மொட்டு வெற்றி பெற்றால் பண்டாரநாயக்காவின் ஸ்ரீ.ல.சு.கட்சி இனி மீதமிருக்காது. இதுதான் உண்மை. இந்த உண்மையினை நாம் பேச வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.