“அரசாங்கங்கள் மாறுவதால் மட்டும் சமூக எழுச்சி ஏற்படாது. மக்கள் தற்போது விரும்புவது ஆட்சி மாற்றத்தை அல்ல சமூக மாற்றத்தையே
விரும்புகின்றனர்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (ஏகேடி) தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தெஹிவளை பேரவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
“அப்போது ரணில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவானவர் என்ற கருத்து நிலவியது. மஹிந்த ஒரு தேசபக்தராகக் கருதப்பட்டார். இருவரும் இரண்டு மேடைகளில் ஏறி, வாள்களை உருவி, போருக்கு அழைத்தனர். ஆனால் அவர்களின் வாள் காகிதம் என்பது மக்களுக்குத் தெரியாது. அதன் காரணமாக அடிமட்ட மக்கள் பிரிந்து குவிந்தனர். இப்போது இருவரும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். அவருக்காக இவர் நிற்கிறார். இவருக்காக அவர் நிற்கிறார். ஆனால் அத்தகைய அரசுகள் சமூகப் புரட்சிகளைக் கொண்டுவருவதில்லை. மக்கள் இப்போது விரும்புவது ஆட்சி மாற்றத்தை அல்ல சமூக மாற்றத்தையே.
“பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சமூக மாற்றம் ஏற்படுகிறது. அதற்கான சூழ்நிலைகள் உருவாக வேண்டும். ஒருபுறம், ஆட்சியாளர்கள் இனி வழக்கம் போல் ஆட்சி செய்ய முடியாது. இப்போது அது நடந்துள்ளது. மறுபுறம், மக்கள் வழக்கம் போல் வாழ முடியாது. இப்போது அதுவும் நடந்துள்ளது. எனவே, சமூக மாற்றத்திற்கான சூழ்நிலை அனைத்துத் திசைகளிலிருந்தும் தயாராக உள்ளது. எனவே, அத்தகைய சமூக மாற்றத்திற்கு தேசிய மக்கள் படை தயாராக உள்ளது.
“மக்கள் வாழ வழியில்லை. வேலை இல்லை. வேலை இருப்பவனுக்கு நல்ல சம்பளம் இல்லை. தற்போதைய சம்பளத்தில் வாழ வழியில்லை. விவசாயம் செய்ய வழியில்லை. அதை தொழிலாக மாற்ற வழியில்லை. தெருவில் ஒரு குழந்தை கூட நடக்க முடியாது. அவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. மனிதர்கள் மனித உறவுகளிலிருந்து விலகி சமூகத்தை ஈரம் இல்லாத சமூகமாக மாற்றியுள்ளனர். எனவே இதனை மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு இன்றைய சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த தொகுதி மாநாட்டில் தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, மௌலவி முனீர் முலஃபர் உட்பட பல பேச்சாளர்கள் கலந்துகொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.