சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில்
சந்தேகம் வெளியிட்டு நேற்று இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மதரஸாவின் நிர்வாகியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த மாணவனின் மரணம் தற்கொலை அல்ல, கொலையாகவே இருக்கலாம் என்றும், அந்த மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருக்கின்றன என்றும் கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது களத்துக்கு வருகை தந்த சாய்ந்தமருது பொலிஸார் மதராஸாவின் மாண்பைப் பேணும் விதமாக மக்கள் கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்கப் பொலிஸார் தயாராக இருக்கின்றனர் எனவும், தடயவியல் பொலிஸாரையும், நீதிவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
(காலைமுரசு)