ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக ஐக்கிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்றைய தினம் (5) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை சமூகத்தில் மலையகத் தமிழர்களை முழுமையாக இணைத்துக் கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பு வடிவேல் சுரேஷ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக அவரது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தோட்டக் கம்பனிகளின் நலன் சார்ந்த விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர் பாதுகாப்பு, தமிழ்ப் பாடசாலைகளுக்கும் பிற பாடசாலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கையிடல் என்பன இந்த நியமனத்தின் ஊடாக வடிவேல் சுரேசுக்கான பொறுப்புகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.