அரசாங்கத்தின் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரேணுக பெரேரா விலகியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா, கடந்த வருடம் ஜனவரி மாதம் மில்கோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஊழியர்கள் நலன் தொடர்பான பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி கடந்த ஒக்டோபர் மாதம் மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த ரேணுக பெரேரா அதன் ஊழியர்களால், அலுவலக வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரேணுக பெரேரா கூறியதாவது,
“நான் நிறுவனத்திலிருந்து பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு, கடந்த 9ஆம் மாதம், 16ஆம் திகதியன்றே தெரிவித்துவிட்டேன். எனினும், அப்போது காணப்பட்ட அரசியல் நிலைமையால், சிறிது காலதாமதம் ஏற்பட்டது.
“ஒரு சில குழுக்களுக்கு, தங்களுக்குத் தேவையான ஒருவரை இதன் தலைவராக நியமிக்க வேண்டிய தேவையும் காணப்பட்டது. இதனால், சிலர் அரசியல் ரீதியாகவும் செயற்பட்டார்கள். அரசாங்கம் இது தொடர்பாக கொள்கை ரீதியாக முடிவொன்றை எடுத்து செயற்பட்டு வருகிறார்கள்.
“இனியும் இங்கே எனது காலத்தை செலவழிப்பது தேவையில்லாத ஒன்றாகும் என்பதே எனது நிலைப்பாடு”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.