ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார் என
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், நாட்டை முன்னேற்ற வேண்டிய தெளிவான பார்வை அவரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாடு எங்கு இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் அவர் செயற்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய எதிர்க்கட்சியும் தங்களுடையது என தெரிவித்த வஜிர அபேவர்தன, இறுதி நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றமடைந்துவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் எமது அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியாவின் அரசியலமைப்பு, 116 தடவைகள் திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. உலகுக்கு ஏற்ற வகையில் நாமும் அரசியலமைப்பை மாற்ற வேண்டும்.
“சிலர் 18 தடவைகள் மாற்றப்பட்டதே அதிகம் எனக்கூறுகிறார்கள். ஆனால், இது போதாது. கொரோனா காலத்திற்குப் பின்னர், உலகமே மாற்றமடைந்துவிட்டது.
“ஐரோப்பிய நாடுகளில் புதிய சட்டங்கள் வந்துள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் ஒட்டுமொத்த சட்டக்கட்டமைப்பையே மாற்றியுள்ளன.
“இலங்கையும் உலகத்துடன் போட்டிப் போட வேண்டுமெனில், நாமும் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.