வட் வரி அதிகரிப்பு கொள்கை, 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக
அமையும் எனவும் வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பை எதிர்த்து தற்போது பொது மக்களும் தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கப்படவுள்ள பெறுமதி சேர் வரி தற்போது மக்களுக்கு பாரிய பிரச்சனையாக மாறியுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தற்போது பலர் இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் வரிகள் குறைக்கப்பட வேண்டுமென்பது தமது நிலைப்பாடென அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் பட்சத்தில் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்குமென மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் தமது அரசாங்கம் வரி கொள்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ராஜபக்ஷர்களின் பெயரை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் மூலம் நிலையான அரசாங்கத்தை அமைப்பது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மையான கடமை எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும் அரச தலைவரும் அந்தக் கட்சியின் கொள்கையிலிருந்து வேறுபட்ட கொள்கையைப் பின்பற்றும் அரசியல் கட்சியின் தலைவரே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.