ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கூட்டியுள்ள - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான - சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை
என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி செயலகத்தில் வடக்கு மாகாண அபிவிருத்திப் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் இளங்கோவன், மேற்படி ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு அழைப்பு அனுப்பி இருந்தார். அதற்கு அளித்த பதிலில் தாம் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அது அவரது தீர்மானம். முடிவு. அதனை நாம் விமர்சிக்கப் போவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் போக்கை நம்பி, அவருடன் சேர்ந்து பணியாற்றி எதனையும் சாதிக்கலாம் என்று கருதி, விடயத்தில் இறங்கிய அவரது முயற்சிக்குக் கிடைத்த பலனை கணக்கிட்டு, இந்த முடிவை அவர் எடுத்திருக்கக் கூடும். அதையும் நாம் தவறு என்று கூறப் போவதில்லை.
ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிப் பல அரசியல் கருமங்களைச் சேர்ந்து முன்னெடுத்த தமிழரசுக் கட்சிப் பிரமுகர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூட 'ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடது புறம் திரும்புவதாக சிக்னலைப் போட்டுவிட்டு, வலது புறம் வாகனத்தைத் திருப்புபவர்'' என்ற சாரப்பட ரணிலின் பண்பியல்பை - நடவடிக்கைகளை - விமர்சித்து இருந்தார். அந்த அனுபவத்தை நீதியரசர் தாமும் பட்டுத் தெளிந்திருக்கின்றார் என்பதை சந்திப்புக்கு போவதில்லை என்று தெரிவித்து, அதை விவரமாக விளக்கி, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் இளங்கோவனுக்கு தாம் அனுப்பிய கடிதத்தில் அவரே தெளிவுபடுத்தி இருக்கிறார்.
திட்டத்துடன்தான் நீதியரசர் விக்னேஸ்வரன் காய்களை முன்நகர்த்தி இருக்கின்றார் என்ற உண்மை இந்தக் கடிதத்தில் அம்பலமாகி இருக்கின்றது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையே மாகாணத்துக்குரிய நியதிச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் கொண்டது. அந்த அதிகாரத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஓர் ஆலோசனைக் குழு மூலம் ஜனாதிபதியே முன்னெடுக்கும் ஒரு தவறான சட்ட வியாக்கியானத்துக்கும், நடவடிக்கைக்கும் விக்னேஸ்வரன் நாசூக்காகத்கின்றது.
திட்டமிட்டுத் தூண்டியிருக்கின்றார் என்ற உண்மையே இப்போது அம்பலமாகியிருக்கிறது. அதாவது, 13 ஆம் திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட நியதிச் சட்ட உருவாக்க அதிகாரத்தை ஜனாதிபதிக்கும், அவரினால் நியமிக்கப்படும் ஆலோசனை சபைக்கும் தாரை வார்க்கும் ஒரு சட்ட முறையற்ற செயற்பாட்டிற்கு விக்னேஸ்வரனும் சேர்ந்து பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றார் என்ற சதித்திட்டமே இப்போது வெளியாகி இருக்கின்றது.
ஏற்கனவே வடக்கு ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா மாகாண சபைகளின் நியதி சட்ட உருவாக்க அதிகாரத்தைத் தனது கைகளில் எடுத்த போது, அதற்கு சரியான சூடு வைத்த உயர்நீதிமன்றம், அது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளின் விவகாரம், அதனை ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநர் முன்னெடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் தமது நியதிச் சட்ட உருவாக்க வர்த்தமானியை அதே ஆளுநர் திரும்ப வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். இப்போது அந்த வேலையை இன்னொரு வடிவத்தில் முன்னெடுக்க முயன்றிருக்கிறார் விக்னேஸ்வரன். இது, 13ஆம் திருத்தத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபையின் அதிகாரங்களை, மீளப் பிடுங்கி ஜனாதிபதியிடம் கையளிக்கும் ஆபத்தான நடவடிக்கை.
அந்தக் கடிதம் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்னொரு ஆபத்தான - விபரீதமான - அரசியல் விளையாட்டையும் நடத்தி இருக்கின்றார் என்ற அதிர்ச்சித் தகவலையும் அம்பலப்படுத்தி உள்ளது.
இயங்காத வடக்கு மாகாண சபையை ஐவர் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கான நிபுணர் குழு ஒன்றின் மூலம் இயங்க வைக்கும் யோசனை ஒன்றைத் தாம் முன்வைத்த போது அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கினார் என்று குறிப்பிடும் விக்னேஸ்வரன், அதற்கு அப்பால் அதிர்ச்சி விடயம் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேற்படி குழு மூலம் மாகாண சபைக்குரிய சுமார் நூறு சட்ட வரவுகளை ஆறு மாதங்களுக்குள் அதிகாரப் பகிர்வுக்கு மாறாக, பகிரப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதி பிடுங்கி எடுத்துத் தாமே பிரயோகம் செய்யும் ஆபத்தான - மோசமான - வேலைக்கு விக்னேஸ்வரனும் சேர்ந்து வழிகாட்டித் துணை போக முயன்றிருக்கிறார்.
மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பிடுங்கி எடுப்பதில் குறியாக இருக்கின்றது பேரினவாதம். அதற்கு யோசனை சொல்லித் துணை போகும் விக்கியின் வேலை 'வீடெரிக்கும் இராசவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரியின் செயலுக்கு' ஒப்பானதாகும்.
நீதியரசருக்கு ஏன் இந்தக் குசும்புத்தன வேலை?
(காலைமுரசு – ஆசிரியர் தலையங்கம்)