உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவி வருகின்ற நிலையில், இலங்கையில் கொரோனாத் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் ஒரு வருடத்துக்குப் பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய கொரோனா மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது.
கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபர் ஒருவர் கொவிட் தொற்றால் இன்று (23) உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொவிட் காலத்தில் போன்று மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வருகின்றது. இதன் காரணமாக சளி, காய்ச்சல் போன்ற நிலைமை ஏற்படலாம். எனினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
J N 1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன காணப்படுகின்றன. இவ்வாறான நோய் அறிகுறிகள் காணப்படும் போது வைத்தியரை நாடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவிலும் J N 1 OMICRON உப பிறழ்வு பரவி வருவதோடு இந்தியாவில் இதுவரை 2660 கோவிட் நோயாளர்கள் கணடறியப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பரவி வரும் இந்த J N 1 கொவிட் பிறழ்வு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.