இலங்கையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (24), நாளை (25) மற்றும் நாளை மறுதினம் (26)ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
“நாளை இடம்பெறவுள்ள நத்தார் பண்டிகை (25) மற்றும் 26ஆம் திகதி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, 'யுக்திய' நடவடிக்கை நிறுத்தப்பட்டு அதன் பிறகு, மீண்டும் தொடங்கவுள்ளது.
“நாம் முழுவதும் கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை முதல் வாரத்தில் அதாவது 7 நாட்கள் வரை 'யுக்திய' எனும் பொலிஸ் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தினோம். இந்த நடவடிக்கையை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
“25ஆம் திகதி நத்தார் என்பதால் குறிப்பாக 24, 25, 26… எங்களிடம் உள்ள அதிகாரிகளை சில பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். அதனால் சில நாட்களுக்கு இந்த நடவடிக்கையை நிறுத்தினாலும், எதிர்காலத்தில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இதேவேளை இன்று (24) அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.