டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திரச் சபையில் பிளவு ஏற்பட்டுள்ளமை அனைவரும் அறிந்த கதையாகும். சஜித் பிரேமதாச
தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில், டலஸ் தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் இணையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பேராசிரியர் ஜிஎல் பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமண, வசந்தயாப்பா பண்டார மற்றும் கேபிஎஸ் குமாரசிறி போன்ற 6 எம்பிக்களும், சஜித் பிரேமதாச குழுவில் இணையத் தயாராக இருப்பதாக வதந்தி பரவியுள்ளது.
“அவ்வாறு வரும் உறுப்பினர்களுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவிகளை வழங்கவும் சஜித் உறுதியளித்துள்ளார். அந்தந்த எம்பிக்கள், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தின் அமைப்பாளர் பதவிகளுக்கு உரித்தாவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதன்போது, கொழும்பு மாவட்டத்தின் அமைப்பாளர் பதவியைத் தனக்கு வழங்குமாறு நாலக கொடஹேவா கேட்டுள்ளாராம். அதற்கு சஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜிஎல் பீரிஸுக்கும் ஐமசவின் உயர் பதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஃபுல் பெக்கேஜ் ஒன்று வழங்கப்படுகிறது.
டலஸ் குழுவைச் சேர்ந்தவர்களுக்குப் பல பதவிகளையும் சலுகைகளையும் கொடுப்பதற்கு, ஐமசவைச் சேர்ந்த சிலர் பெரும் அதிருப்பியடைந்துள்ளனர் என்ற விடயத்தை நாம் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.
இப்போது, அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷன்ன ஜயசுமனவையும் இணைத்துக்கொள்ளும் முயற்சி தொடர்பில் வெளியானதும், மனோ கணேசன் தரப்பு அதற்கு பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் எமக்கு இடையூறு விளைவித்த ஷன்ன போன்றவர்களை ஐமசவில் இணைத்துக்கொள்வதாயின், தொடர்ந்தும் கட்சியில் இருப்பதா, இல்லை வெளியேறுவதா என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டி ஏற்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியே போனால், ரத்தன தேரர், கம்மன்பிடி, விமல் போன்றோரையும் இணைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதென்று, ரஞ்ஜித் மத்துமபண்டாரவுடன் மனோ கணேசன் கடுமையாக வாக்குவாதப்பட்டுள்ளார்.
கிடைத்திருக்கின்ற தகவல்களின்படி, இவ்வாறான இனவாதிகளை இணைத்துக்கொள்வதில், ரிஷாட்கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். டலஸின் சுதந்திரத்துக்கு கேம் கொடுக்க முயற்சிக்கப்போய், சஜித்தின் சுதந்திரம் தற்போது பறிபோயிருக்கிறது.
காரணம், மனோ, ரிஷாட் ஆகியோருடன் ஷன்ன போன்றோரை இணைப்பது எப்போதும் நடக்காத காரியமாகும். அந்த ஷெப்டரை சஜித் எவ்வாறு க்ளோஸ் செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தேர்தல் காலத்தில் கூட்டணி வைத்து, அரசியல் மிருகங்களை ஒரே Bucketக்குள் தள்ளுவது தொடர்பான விசித்திரக் கதையொன்றை, அண்மையில் ஷம்பிக்க ரணவக்க கூறியிருந்தார். “ஒன்றும் ஒன்றும் சேர்த்தால் விடை இரண்டு. ஆனால், அரசியல் கூட்டணிச் சூழலில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால், விடை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ மாறலாம். சில வேளைகளில் அது பூச்சியமாகக்கூட மாறலாமென்று அவர் குறிப்பிட்டிருந்தார்.