யாழ்ப்பாணம் - தாவடியைச் சேர்ந்த ஆண் சிசுவொன்று, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. மதுரன் கிருத்திஸ் என்ற
பதினொரு மாத சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட இந்தச் சிசு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (24) மதியம் வரையான நிலவரப்படி 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு டெங்கு காய்ச்சல் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.