“இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமையச் செயற்படும் சம்பந்தன், சுமந்திரன்
ஆகியோர் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் இணங்கவே மாட்டாது” என்று, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்க் கட்சிகள் நடத்தும் சந்திப்புக்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் எல்லை மீறிப் பேசுகின்றனர். அரசமைப்பை மீறி எதனையும் செய்ய முடியாது என்பதை அரசியலில் முதிர்ச்சி பெற்ற அவர்கள் இருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
“இறுதியாக ஜனாதிபதியுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் நடத்திய பேச்சின்போது வெறும் 4 தமிழ் எம்.பிக்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர். அதில் பங்கேற்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
“இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையேல் தாம் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது ஒருபோதும் சாத்தியப்படாத விடயமாகும். சர்வதேசத்தை நம்பி ஏமாறாதீர்கள் என்று சம்பந்தன், சுமந்திரனிடம் சொல்லி வைக்கின்றேன்” என்றார்.
(காலைமுரசு)