இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தை எதிர்வரும் 10ஆம் திகதி கட்சியின் பெரும் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில்
நடத்தி கட்சியின் தேசிய மாநாட்டு சர்ச்சைக்குத் தீர்வு காண்பது எனத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது என்று சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
திருகோணமலை கிளைகளை மீளப் புனரமைக்காமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம் என்று இரா.சம்பந்தன் கட்சியின் தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை ஆராய நேற்று கட்சியின் சிலச்தலைவர்கள் யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதி அலுவலகத்தில் கூடி இந்த முடிவை எடுத்தனர் என்று கூறப்பட்டது.
இதன்போது, எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் வீட்டில் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தைக் கூட்டி, இந்தச் சிக்கல் தொடர்பில் ஆராய்வது என்றும், மாநாடு தொடர்பில் இறுதியான தீர்மானத்தை அங்கு எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி 21ம் திகதி தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை கூடி புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் என்றும், ஜனவரி 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூடும் என்றும், 27 ஆம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெறும் என்றும், தொடர்ந்து 28 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு இடம்பெறும் என்றும் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை அலுவலகத்தில் இம்மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(காலைமுரசு)