மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர்களின் "உழைப்பை" அங்கீகரிக்கும்
வகையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டலில், தமிழ்நாடு பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில், பாரதீய ஜனதாக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நினைவு அஞ்சல் முத்திரையை இன்று புதுடில்லியில் வெளியிட்டுள்ளார்.
இம்முத்திரையை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், விரகேசரி பத்திரிக்கையின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், GOPIO தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவி அனுசியா சிவராஜா, பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தாவிசாளர் ராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஸ்ட ஆலோசகர் மதியுகராஜா இ.தொ.காவின் உப தலைவர்களான சிவஞானம்,பிலிப் குமார்,அசோக் குமார், பாஸ்கர்,பிரதி பொது செயலாளர் செல்லமுத்து,உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், அதில் கூறியுள்ளதாவது,
“இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும், ஒத்துழைப்புகளுக்கும் மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை கௌரவப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஏற்பாட்டில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளமையும் இதற்கு மற்றுமொறு சான்றாகும்.
“இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பாரதிய ஜனதாக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வு இன்று (30) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன், தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையிட்டு வருந்துகின்றேன்.
“எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி எமது கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். அதேபோல பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நடா, தமிழக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விழா ஏற்பாடு குழுவினருக்கு மலையக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
“இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த உறவுப் பாலமாக அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் இருந்து வருகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு என்றும் நாம் ஒத்துழைப்புகளை வழங்குவோம்.
“மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் பல உதவிகளை செய்துள்ளது. வீடமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், தொழில் பயிற்சிகள் என அந்த பட்டியலை நீடித்துக்கொண்டே செல்லலாம். இந்நிலையில் எமது மக்களை கௌரவப்படுத்தி நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை எமது மக்கள் மீதான இந்தியாவின் கரிசனையை உறுதிப்படுத்துகின்றது” என்று, ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.