“பல்வேறு சவால்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம். நம் அனைவருக்கும்
ஆயிரத்தோரு தனிப்பட்ட இலக்குகள் இருந்தாலும், அவை அனைத்தையும் வெற்றியடையச் செய்வதற்கு, தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நமது தாய்நாட்டை மீட்பது இன்றியமையாதது” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே, மேற்கண்டவாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“கடந்த காலங்களில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் மற்றும் துயரங்களைத் தாங்கிக் கொண்டதன் பலனாக நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க எம்மால் முடிந்துள்ளது.
“இருப்பினும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, அதேபாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும். அது மலர் பாதையாக இல்லாமல், முட்களும், கற்களும் நிறைந்த பாதையாகவே அமைந்திருக்கும்.
“இதனால், இலங்கை மீளக் கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இலங்கையராகிய எமது பொறுப்பாகும். ஜனவரி மாதத்திற்கு ஜேனஸ் எனும் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அக்கடவுளினால் முன்னோக்கி மாத்திரம் அன்றி, பின்னோக்கியும் பார்க்க முடியுமாம்.!
“அதனால் எதிர்காலம் தொடர்பில் மட்டுமன்றி, கடந்த காலம் தொடர்பிலும் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்காக எமது பொறுப்புக்களை அறிந்துகொள்வோம். அவற்றை செயற்படுத்தி, தாய் நாட்டை பலப்படுத்துவோம். அதற்காக பொறுப்புடனும் அர்பணிப்புடனும் செயற்படுவோம். அதனால் புத்தாண்டை செழிப்பானதாக மாற்றிக்கொள்வோம். பிறந்திருக்கும் இந்த ஆண்டு, அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்” என்று, ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.